Saturday, January 9, 2010

எண்ணத்தின் திசையை மாற்றும் இசை

பல தரப்பட்ட மனிதர்களையும் சம்பவங்களையும் நாள்தோறும் சந்திக்கிறோம். ஒரு நாளின் அனுபவங்களை அசைபோடும்போது நமக்கு மகிழ்ச்சி ,வருத்தம் ,கோபம் அல்லது அமைதி இவற்றுள் ஏதோ ஒரு உணர்ச்சி மேலோங்கி நிற்கிறது. அத்தகைய உணர்வுக்கு ஏற்றவாறு நமது மனமும் தனது நிலை கொள்கிறது.
ஒவ்வொரு நாளும் எவ்வாறு விழிக்கும் பொழுது புத்துணர்வுடன் விழிக்கின்றோமோ அவ்வாறே உறங்கும்போதும் புத்துணர்வுடனோ அல்லது சலனமில்லா மனதுடனோ உறங்குதல் அவசியம்.

மிதமிஞ்சிய மகிழ்ச்சி கர்வத்தையும், வருத்தம் தன்னிரக்கத்தையும் , கோபம் தீய எண்ணங்களையும் நம் மனத்தில் விதைக்கும் .

இவ்வகை உணர்ச்சிகளை சமன்படுத்தி ஒவ்வொரு நாளின் இறுதியிலும் நம் மனம் அமைதியில் மட்டுமே உறைவதற்கு வழி வகை செய்தல் மிக அவசியம். இதுவும் ஒரு வித யோக சாதனை ஆகும்.

இத்தகைய நிலையை அடைய இசை பெரிதும் துணை செய்கின்றது . இசையை ரசிக்க , ஸ்வர ஞானமோ, ராக நுணுக்கங்களை பற்றிய அறிவோ தேவை இல்லை.
ஒவ்வொரு இசையும் , அது கர்னாடகமானாலும் , க்ராமியமானாலும், மேலை நாட்டுடையதானாலும் தனது ஒவ்வொரு வெளிப்பாட்டிற்கும் ஒவ்வொரு உணர்வுகளை தூண்ட வல்லது. திரை இசை இவற்றுள் ஏதேனும் ஒன்றின் பரிமாணமாகவே வெளிப்பட்டு அதிர்வுகளை பிரதிபலிக்கிறது.

ஆகையால் இசைபற்றிய ஞானம் இல்லாமலேயே இசையை அனுபவித்தல் சாத்தியம்.

அடிப்படையில் ஒவ்வொரு ராகத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. பலதரப்பட்ட சங்கீதத்தை கேட்கும் நாம் நமது மனதில் தாக்கத்தை எற்படுத்துபவற்றை , எத்தகைய தாக்கம் என்பதையும் சேர்த்து பதிவு செய்துகொண்டால் , நமது தேவையின் பொது அவை அருமருந்தாக பயன்படும்.

நமக்காக நாம் இத்தகைய ஒரு சிறு பயிற்சியை செய்து ஒரு பட்டியலை தயார்செய்துகொண்டால் நம்முடைய மன அமைதியின்மை என்னும் அன்றாட நோய்க்கு நாமே மருத்துவம் பார்க்கலாம்.

பொதுவான சில ராக பரிந்துரைகள் :
இவை எனக்கு பயன் தந்ததால் உரைக்கிறேன்

கர்வம் கொள்ளும் போது : ரேவதி ராகம்
சோர்வு கொள்ளும் போது : கதன குதூகலம் மற்றும் வசந்தா
தன்னிரக்கம் கொள்ளும் போது : கம்பீர நாட்டை

இவை மேற்குறிப்பிட்ட நிலையை சமன் செய்து நமது மனநிலையை அமைதி கொள்ள செய்யும்.

முயன்று பாருங்கள் , பலன் அளித்தால் பிறருக்கு பரிந்துரையுங்கள்.

கீழ் காணும் வலை பக்கத்தில் திரை இசையில் வந்த ராகங்களைப்பற்றி குறிப்பு உள்ளது. அவற்றில் உங்கள் மனதிற்கு பிடித்த பாடல் இருந்தால் , அது எந்த மனோபாவத்திற்கு உங்களை அழைத்து செல்கிறது , என்ன ராகத்தில் உள்ளது எனக்கண்டு உங்கள் மருந்தை நீங்களே தயார் செய்து கொள்ளுங்கள்.

என்றும் உங்களுடன்
அன்பன் முகுந்தன்
http://www.tfmpage.com/forum/classical.html#g



1 comment:

Post a Comment